சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் பதினோரு வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். அப்பாவி சிறுமியின் எதிர்காலத்தை சூறையாடிய 17 அரக்கர்களின் காட்டுமிராண்டித்தனம் மனித குலத்தையே வெட்கி தலைகுனிய வைப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், மனித உருவத்தில் நடமாடிய மிருகங்கள் என சாடியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு காரணமான 17 பேர் மீதும் போக்சோ , கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்று ஆறுதலாக இருப்பதாக கூறியுள்ள அவர், இந்த வழக்குகள் முறையாக விரைவாக விசாரிக்கப்பட்டு, அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படுகின்ற நாள்தான், இந்த சமுதாயத்தில் இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி மற்றும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கும், குடும்பத்துக்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.