If the public has doubts about the weight of golden jewelry, we should overcome the weight with the weight: officials warn the jewelers
நாமக்கல் : பொதுமக்களுக்கு தங்க நகை எடையில் சந்தேகம் வந்தால் நகைக் கடைக்காரர்கள் தராசில் எடைக்கற்களைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தொழிலார் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின்படி முத்திரையிட தவறியவர்கள் பட்டியலின்படி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மஞ்சள்நாதன் தலைமையில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 70 நகைக் கடைகளில் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது நகைக் கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 9 எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 36 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நகைக் கடை வணிகர்களிடம், கடைகளில் உள்ள எடையளவுகளின் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு அளவு சோதனை எடைகற்கள் வைத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எடையளவு குறித்த சந்தேகங்கள் எழும் பட்சத்தில் சோதனை எடைகற்களைக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், எடையளவு சட்டத்தின் கீழ் தவறாது எடையளவுகளை மறுமுத்திரையிடவேண்டும் எனவும், மறுமுத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் சங்கர், ராகவன், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் இளங்கோவன் (பொ), ராஜன், சுதா, சாந்தி ஆகியோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.