Mohammed Sadek kelakarai Polytechnic College Achievement Awards
முயல் வெல்லும், ஆமை வெல்லும், ஆனால் முயலாமை வெல்லாது. மாணவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வெற்றிகனியை எட்டி முன்னேற்ற பாதையில் செல்ல முடியும், என, தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கக்ஷடுதல் இயக்குனர் அருளரசு அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் இந்தாண்டுக்கான சாதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா அல்ஹாஜ் டாக்டர் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடந்தது.
இவ்விழாவில் கல்லுாரி துணை முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.யுசுப் சாகிப் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு பேசும்போது, மாணவர்களுக்கு மீன் சாப்பிட கற்றுத்தருவதைவிட மீன் பிடிக்க கற்றுந்தந்தால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர். மாணவர்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் உள்ளது. உலகம் தற்போது கையளவில் வந்துவிட்டது. நீங்கள் உங்கள் தேடல்களை தொடர்ந்து தேட வேண்டும். உங்கள் தேடல் முலம் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இந்தியா முன்னேற வேண்டும் என்றால் அதற்கு மாணவர்களைத்தான் நம்பினார். நீங்கள் முயல் வேண்டும். முயல் வெல்லும்… ஆமை வெல்லும்…. ஆனால் முயலாமை எந்த காலத்திலும் வெல்லாது. எனவே மாணவர்கள் நீ்ங்கள் முயற்சித்தால் வெல்ல முடியும். கல்லுாரிகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவார்கள். ஆனால் அந்த வேலைவாய்ப்பின் முலம் நீங்கள்தான் முயற்சித்து அன்றாட நிகழ்வுகளை தெரிந்து முன்னேற வேண்டும்.
பேட்டரி தொடர்ந்து சார்ஜ் செய்வது போல் மாணவர்கள் தங்கள் அறிவை அன்றாட அப்டேட் செய்து வளர்த்து கொள்ள வேண்டும். எந்த வேலைக்கு சென்றாலும் வேலை குறித்தும் சுற்றுவட்டாரங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மொழி பிரச்னைக்கு இடம் தராத வகையில் மொழிகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.
பின் கல்லுாரியில் படிப்பு மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்து மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். அதேபோல் சிறந்த மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முகம்மது சதக் பொறியியல் கல்லுாரியின் டீன் டாக்டர் ஏ.முகம்மது சகுபர், முதல்வர் அப்பாஸ்முகைதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ரஜபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர். துறைத்தலைவர் யோசுவா நன்றி தெரிவித்தார்.