The AIADMK Adminstrtive petitioned to the Union Minister of State for making a bridge on the National Highway
பாடாலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனிடம் பெரம்பலூர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் வேல்முருகன் மனு கொடுத்தார்.
அதில கோரப்பட்டுள்ளதாவது:
மனுவில், உளுந்தூர் பேட்டை – பாடாலூர் பகுதியில் திருச்சி – சென்னை (NH 45) தேசிய நெடுஞ்சாலையில் 285வது கிலோ மீட்டரில் பாடாலூரில் ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல பிரிவு விடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மக்கள் சாலையை கடந்து செல்ல முற்படும்போது அதிகளவில் விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த விபத்தில் சிக்குபவர்கள் உயிர் பிழைப்பது மிக கடினமாக உள்ளது.
இதில், பாடாலூரில் பிரதிவாரம் வியாழகிழமையில் காய்கறி சந்தை நடைபெறுகிறது. இந்த காய்கறி சந்தைக்கு பாடாலூரை சுற்றியுள்ள சுமார் 30 கிராம பொதுமக்கள் 10 ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். இந்த காய்கறி சந்தை நடைபெறும் அன்று மக்கள் கூட்டம் நெருக்கடியாலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகின்றனர். ஒவ்வொரு வியாழகிழமை தோறும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த பிரிவு ரோடு வழியாகதான் புகழ்பெற்ற ஊட்டத்தூரில் உள்ள சுத்தரெத்தினேஷ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அப்போது பக்தர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், இந்த ஊட்டத்தூர் பிரிவு ரோடு வழியாகதான் ஆவின் பால் பண்ணை, அரிசி உணவு தானிய சேமிப்பு கிடங்கு ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும். இந்த சாலையின் மேற்புறம் அரசு பொது மருத்துவமனை அமைக்க அரசாணை பெற்று உள்ளோம். இந்த மருத்துவமனைக்கு செல்வதற்கு இந்த ஊட்டத்தூர் ரோடு பிரிவு பகுதி வழியாகதான் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இதனால் இன்னும் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.
எனவே பாடாலூர் மற்றும் பாடாலூரை சுற்றி உள்ள 30 கிராம மக்களின் நலனுக்காகவும், இப்பகுதியில் அமைந்துள்ள ஆவின் பால்பண்ணை, அரிசி உணவு தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுக்கு வந்து செல்லும் மக்களின் நலனுக்காகவும் பாடாலூர் தேசிய நெடுஞ்சாலை ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை தரவேண்டும் என கோரிக்கை வைக்கபட்டுள்ளது.