The Collector inspection at Ammapalayam Government Primary Health Center near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வெளிப்புற நோயாளிகள் பிரிவு, உட்புற நோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் அனுமதிக்கப்படும் பிரிவு, மருத்து கொடுக்கும் இடம், இரத்தப்பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம் என சுகாதார நிலையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவர்கள் தவறாது வருகை தருகிறார்களா என்றும், உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்ட அவர், போதுமான அளவிலான மருந்துகள் இருப்பு உள்ளதா என்றும், தினந்தோறும் சராசரியாக வெளிப்புற நோயாளிகள் எத்தனை பேர் வருகை தருகிறார்கள் என்றும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து வெளிப்புற நோயாளிகளுக்காக ரூ.60லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் நபர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மருத்துவமனையினை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரப்பணிகளுக்கான இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.சசிகலா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.அரவிந்தன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மரு.வசந்தா, மரு.சுரேஷ், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.