#womens day Ramanathapuram
மாணவிகள் பயிலும் போது நல்ல எண்ணங்களோடு நல் வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான வழியில் சென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியாது, என, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மார்ச் 10ம் தேதி நடந்த உலக பெண்கள் தினவிழாவில் பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக பெண்கள் தினவிழாவை முன்னிட்டு கல்லுாரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இரு நாட்கள் நடந்த பெண்கள் தினவிழாவின் இறுதிநாள் விழாவில் பரிசளிப்பு மற்றும் உலக பெண்கள் தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி கயல்விழி பேசியதாவது:
மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் என்ன மாதிரி வரவேண்டும் என திட்டமிட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் சட்டம் குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் இன்று பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் என்பது நம் வாழ்க்கையோடு இணைந்துள்ளது. பெண்கள் திருமணம் செய்தபின் ஏற்படும் பிரச்னைகள் சமாளிக்க சட்டம் தெரிந்திருக்க வேண்டும். சட்டம் என்பது நம்மோடு இணைந்தது.
பெண்கள் சிலர் பயிலும் போது காதல் போன்ற தவறான வழியில் சென்று தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். மாணவிகள் பயிலும் போது நல்ல எண்ணங்களோடும் எதிர்கால திட்டத்தோடும் நல்ல வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான வழியில் சென்ற பெண்கள் பலர் வாழ்க்கையை தவறவிட்டுள்ளனர். தவறான வழியில் சென்றால் முன்னேற்றம் என்பது கிடைக்காது. பெண்கள் தினவிழாவில் ஒவ்வொரு மாணவிகளும் அன்னை தெரசா, கல்பனா சாவ்லா, கிரண்பேடி போன்ற சாதனை பெண்களாக வரேவண்டும் என சபதம் எடுத்து பயில வேண்டும், என்றார்.
விழாவில் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார், கல்லுாரி சேர்மன் ராஜாத்தி அம்மாள், கல்லுாரி முதல்வர் அமானுல்லா, செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் மாரிமுத்து, நிர்வாக அதிகாரி சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். பின் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நீதிபதி கயல்விழி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.