உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் செப் .12 தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர்வட்டம், எளம்பலூர் கிராமத்தில், பெரம்பலூர் உதவி ஆணையர்(கலால்) பாலகிருஷ்ணன் தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான் தலைமையிலும், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் பெரம்பலூர் (பொது விநியோகத்திட்டம்) துணைப்பதிவாளர் கிருஷ்ணசாமி தலைமையிலும் 12.09.2015 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம், என அதில் தெரிவித்துள்ளார்.