குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், அங்கன்வாடி மையங்களிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

schedule
2015-11-03 | 14:41h
update
2026-04-19 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்தும், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் புதுநடுவலூர், வெள்ளனூர், லாடபுரம், அம்மாபாளையம் மற்றும் மேலப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (3.11.2015) நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சீராக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 குடியிருப்புகள் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.61.11 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் செங்கரையூர் அருகில் கொள்ளிடம் ஆற்றில் நீர்சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் சுமார் 539.45 கி.மீ நீளத்திற்கு பல்வேறு அளவுள்ள குழாயின் மூலம் நீர் உந்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 40 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரித்து 306 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுபோன்ற திட்டங்களால் பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுநடுவலூர், வெள்ளனூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தங்கள் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வெள்ளனூர் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ள நீரைப்பார்த்த மாவட்ட ஆட்சியர் கிணற்று நீர் நல்ல நிலையில் உள்ளதால் உடனடியாக மூடி பாதுகாக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், குடிநீர் வழங்கும் கிணற்றைச் சுற்றி பொதுமக்கள், குழந்தைகள் மலம் கழிப்பதை தடுக்க வேண்டுமென்றும் பொதுமக்களிடம் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

கிணற்றையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தகவல் பலகை கிணற்றின் அருகில் அமைக்க வேண்டுமென்றும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் வெள்ளனூர் அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு குழந்தைகளுக்கு பரிமாரப்பட்ட உணவின் தரம்குறித்து சாப்பிட்டுப் பார்த்தார். குழந்தைகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் அக்குழந்தைகளுக்கு அங்கு கற்றுத்தந்த பாடல்களை பாடச்சொல்லி கேட்டார். பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமும் குடிநீர் விநியோகம் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத்தொடரந்து லாடபுரம் மற்றும் அம்மாபாளையம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுவது குறித்தும், அங்கன்வாடி மையங்களிலும் மாவட்ட ஆட்சியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 14:46:15
Privacy-Data & cookie usage: