பெரம்பலூர் மாவட்டம் தமிழகம் தொழில் துறையில் முதல் இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்

schedule
2015-08-08 | 18:02h
update
2026-04-16 | 11:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கிடும் வகையில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது குவிமையப்படுத்தும் சாலை முகாம் நிகழ்ச்சி இன்று(8.8.82015) தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:

தமிழக முதலமைச்சரின் தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023 ஆவனத்தின்படி நமது மாநிலத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றிட தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்திடவும், நமது தமிழக முதலமைச்சர் தலைமையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 2015 சென்னையில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டின் போது ஒரு லட்சம் கோடி வரையிலான தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழகத்தில் ஏற்படுத்திட தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த அருமையான சூழ்நிலையில் தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதற்கேற்றவாறு வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்துறையில் தேவையான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 33 தொழில் முனைவோர்கள் ரூ.52 கோடி முதலீடு செய்வதற்கு முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிறுவனங்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உற்பத்தியை துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தொழில் துவங்க உள்ள நிறுவனங்களுக்கு மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று துவங்கவும் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடனுதவி பெற்று தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதம் மூலதன மானியமும், மூன்று ஆண்டுகளுக்கு 20 சதவிகிதம் மின் மானியமும், ஜெனரேட்டர் மானியம் 25 சதவிகிதமும், மதிப்புக் கூட்டு வரிமானியம், வங்கிக்கு செலுத்தும் வட்டிக்கு 3 சதவிகித பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

தொழில் துவங்க தேவையான அனைத்து உரிமங்கள் மற்றும் அனுமதி போன்றவற்றை மாவட்டத்தின் பிற துறையிடமிருந்து ஒற்றை சாரளமுறையில் பெற்றுத் தர மாவட்ட தொழில் மையம் அனைத்து உதவிகளையும் செய்யும்.

தமிழக முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக 525 பயனாளிகள் ரூ.4 கோடியே 85 லட்சம் மானியம் பெற்று தொழில் துவங்கியுள்ளனர்.

Advertisement

அதுமட்டுமல்லாது நடப்பு நிதியாண்டில் இதுவரை 23 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ. 15.99 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ. 47.795 லட்சம் மானியத்துடன் ரூ. 199.71 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ. 37.82 லட்சம் மானியத்துடன் ரூ. 143.22 லட்சம் மதிப்பீட்டிலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா;களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு ரூ. 22.58 லட்சம் மானியத்துடன் ரூ. 90.34 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் தொழில் துவங்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பினை பெருக்கும் நோக்கிற்காக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதின் பேரில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் இரூர் கிராமங்களில் 40.35.0 ஹெக்டேர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முன்நுழைவு அனுமதி சென்னை கைத்தறி மற்றும் நெசவு இயக்குநருக்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 14 தொழில் முனைவோர்கள் ஜவுளி பூங்காவில் பங்கெடுப்பதற்கான விருப்பக் கடிதம் அளித்துள்ளனர்.

ஜவுளிப்பூங்காவில் பங்கெடுக்கும் வரும் தொழில் முனைவோர;களுக்கு நிலம் பிரித்து தரப்படும். மேலும், அப்பகுதி மேம்பாடு செய்யப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர், மின்சார வசதி போன்றவைகள் ஏற்படுத்தி 99 ஆண்டுகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு தொழில் முனைவோருக்கு வழங்கப்படும்.

மாநில திட்டக்குழு அறிக்கையின்படி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியமானது மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய ஒன்றியமாகும். மேலும் இந்த பகுதியில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் வேலைக்கு பெரும்பான்மையான வேலையாட்கள் இடம் பெயர்ந்து திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் மற்றும் பெங்களுரு ஆகிய பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு உள்ளுரிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் முகமாக, தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஓலைப்பாடி, நன்னை, கீழப்புலியூர், மற்றும் முருக்கன்குடி ஆகிய கிராமங்களில் பயன்பாடின்றி இருந்த 11 கட்டிடங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.112 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட தயார் செய்யப்பட்டுள்ளன. கிளாசிக் போலோ, ஸ்ரீ அப்பேரல்ஸ், இன்டர்வீவ் போன்ற முன்னனி ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தக் கட்டிடங்கள் தமது தயாரிப்பு பணியினை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியினை பெருக்கும் நோக்கில், பெரம்பலூரில் பால் பெருக்கு நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்ததின் பேரில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் சுமார் 22.09 ஏக்கர் நிலப் பரப்பில், 36.00 கோடி மதிப்பீட்டில் புதிய ஆவின் பால் பெருக்கு நிலையம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தி செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு அதிக வருவாய் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் இதனால் பால் உற்பத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வலுவடையவும், உற்பத்தியாளர்கள் அதிக வருவாய் பெறவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்ததை தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகளை முதலீட்டாளர்களும், தொழில் முனைவோர்களும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் பேசினார்

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பெரம்பலூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார்.

முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை தொழில் தொடங்க சம்மதம் தெரிவித்துள்ள கிளாசிக் போலோ மற்றும் இன்டர;வீவ் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்காசோளத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கும் ரெங்கமணி இண்டஸ்டிரீஸின் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்களின் தொழில் முதலீடுகள் குறித்து விளக்கிப் பேசினர்.

அதன்பின்னர் அவர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் வைத்திலிங்கம் தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்கினார்.
புதிய நிறுவனங்களில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், டான்சிடா வின் இணை இயக்குநர் ராஜீ, நகராட்சித் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் இராமச்சந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மோகன் ரெங்கன், சிட்கோ துணை மேலாளர், ஜெயலெட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 11:08:53
Privacy-Data & cookie usage: