பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகினறனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு தலைமை மருத்துவமனை, 25க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ரைஸ் மில்கள், வெல்டிங் ஸ்டாப்கள் உட்பட பல்வேறு தொழிற்கூடங்கள் உள்ளன.
பெரம்பலூரில் நகர பகுதிகளில் இரவு மற்றும் பகல் என அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அடிக்கடி மின் தடை செய்ப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் புறநகர் மற்றும் கிராம புறங்களில் மணி நேரத்துக்கு ஒரு முறை என இரவு நேரங்களிலும், பகல் நேரங்களில் நினைக்கும் நேரமெல்லாம் மின் தடையும் உள்ளது. இல்லத்தரசிகள் சமையல் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
இது போன்று அடிக்கடி ஏற்படும் மின்தடையால் தொழில் நிறுவனங்கள் வேலை நடக்காமல் உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. மின்தடை செய்யப்படும் நேரங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சைகள் போன்றவை இதனால் குறித்த நேரத்துக்கு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தொடர்ந்து மின்விநியோகம் செய்வதாக அவ்வப்போது தமிழக அரசு அறிவித்திருந்த போதிலும் பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் குழந்தைகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.