பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6.வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையிலுள்ள 6, 7 வது வார்டுகளை சேர்ந்த கம்பன் நகர், முத்து நகர், பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றன.
கடந்த 10 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் இல்லையென கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய தேவையான குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என வார்டு கவுன்சிலர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும், நகராட்சி ஆணையரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.
ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் இன்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நகராட்சி ஆணையர் முரளி மற்றும் வருவாய்த்துறையினர் தண்ணீர் லாரியுடன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.