20150817050052

பெரம்பலூர்- பெரம்பலூர் அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பரவாய் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணறு மூலம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் பரவாய் கிராம பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இக்கிராம பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் பெரம்பலூர்-வேப்பூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலறிந்த குன்னம் தாசில்தார் ஷாஜகான், வேப்பூர் பி.டி.ஓ., பழனிசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பெரம்பலூர்-வேப்பூர் இடையேயான போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!