பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 1, 2 மற்றும் 4 பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகி பணியில் உள்ளனர். இது தவிர தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குரூப்-2 பணிக்கான பொதுத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வில் பங்கேற்க 375 நபர்கள் பதிவு செய்திருந்தனர்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 31.10.2015 அன்று நடத்தப்பட்ட தேர்வில் 348 நபர்கள் கலந்துகொண்டனர். குரூப் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த நபர்களால் தயாரிக்கப்பட்ட 200 கேள்விகளுடன் காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுக்கான முடிவுகள் 1.11.2015 அன்று வெளியிடப்பட்டது. இந்த முடிவுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார்ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்கும் வசதியை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்வில் 66 நபர்கள் தேர்வாகியுள்ளனர். தேர்வான அனைவருக்கும் தனித்தனியாக அலைபேசி வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு நாளை (4.11.2015) அறிமுக வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான கால அட்டவணை நாளை அனைவருக்கும் தெரிவிக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!