PMK Party – 2019 – Election Statement

பாமக விடுத்துள்ள தேர்தல் அறிக்கை:

சமூகப் பாதுகாப்பு

* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,000 வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமானத் திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசை பா.ம-.க. வலியுறுத்தும்.
* கொடிய வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்குப் போதுமான உணவை வழங்கிப் பாதுகாப்பு அளிப்பது அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.
* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

வேளாண்மை

* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.
* இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்த பா.ம.க. வலியுறுத்தும். அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும்.
* நில உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுவதைப் போன்று, வேளாண் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* விவசாயிகளுக்கு உரிய இலாபமும், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படுவதை உறுதி செய்ய உழவர் ஊதியக் குழு அமைக்கப்படும்.
* வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். இதற்காக வேளாண் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
* வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை களையும் நோக்குடன், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்கப்படும்.
* 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக உழவர்கள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.

பயிர்க்கடன் தள்ளுபடி

* இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பயிர்க்கடன்களில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள தொகையை உழவர்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். அவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகையில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.
* பொதுத்துறை வங்கிகள் மூலம் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்பாகவே செலுத்தப்படும் தொகைக்கு 10% வட்டிமானியம் வழங்கப்படும்.
* தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானம் உழவர்களுக்கு அதிக இலாபம் கொடுக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களிலும் நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.
* தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல நிர்வாக அலுவலகம் தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை தஞ்சாவூருக்கு மாற்ற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
* நீலகிரி மாவட்டம் ஊட்டி முத்தோரையில் செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடும் முடிவைக் கைவிட்டு, அம்மையம் அங்கேயே தொடர்ந்து செயல்பட பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

நீர்ப்பாசனம்

* இந்திய நதிகள் இணைப்பு குறித்த செயல்திட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு உத்தேசமாக உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நதிகள் இணைப்பு குறித்த சூழல்களும், தொழில்நுட்பமும் மாறியிருப்பதால், அவற்றைக் கருத்தில் கொண்டு நதிகள் இணைப்புக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்படும். இதற்காக நீர்ப்பாசன வல்லுநர்களைக் கொண்டு தனி ஆணையம் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் நலனுக்காக கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.
* தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசன பெருந்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.
* காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மாற்றாக, அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்பை ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற பெயரில் அமைக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.
* ஆறுகள் தேசிய மயமாக்கப்படவேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். நதிகள் இணைப்புக்கு இதுதான் அடிப்படை ஆகும். எனவே, மாநிலங்களுக்கு இடையே பாயும் அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பா.ம.க. பாடுபடும்.
* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப்பெற பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

சுற்றுச்சூழல்

* காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அங்கீகரிக்கப்படும். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* கடலூர், நாகை மாவட்டங்களில் அமைக்கப்படுவதாக இருந்து, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை நிரந்தரமாக கைவிடும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 200 வகையான பயிர்களை வயல்களில் பயிரிட்டு சோதனை நடத்துவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதியை புதிதாக அமையும் அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துவோம்.
* தமிழ்நாட்டில் கடலூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, தூத்துக்குடி, எண்ணூர், பவானி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை மாசுவைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் பா.ம.க. பாடுபடும். இதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் உதவியைப் பெற்றுத்தரும்.
* புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிலையில் வகுத்து செயல்படுத்துவதை உறுதி செய்யும்படி, மத்திய அரசை பா.ம.க. கேட்டுக்கொள்ளும்.

மாநில சுயாட்சி

* மத்திய & மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து, இன்றைய சூழலில் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும். ஓராண்டிற்குள் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டு, உடனடியாக அதன் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நெருக்கடி நிலை காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை பகிர்ந்து அளிப்பதற்கான வரையறைகள் மாற்றியமைக்கப்படும். வளர்ச்சியடைந்த மாநிலங்கள், பின்தங்கிய மாநிலங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
* மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு தற்போதுள்ள 44 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

நல்ல ஆளுகை

* லோக்பால் அமைப்பு மத்தியில் புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.
* மத்திய அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* மத்திய அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படும்.

சமூகநீதி

* 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.
* இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும். தேசிய அளவிலான இடஒதுக்கீட்டின் அளவு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க பா.ம.க. பாடுபடும்.
* அரசுத் துறை மற்றும் பொதுத்துறை பணிகளில் பதவி உயர்விலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தனியார் துறை இடஒதுக்கீடு

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.
* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அறிமுகம் செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.
* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பா.ம.க. பாடுபடும்.

மாநில முன்னுரிமை

* ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து, தொழிலாளர் நிலை பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும்.
* மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50% பணியிடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.
* மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைநிலை பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும். அதாவது, கடைநிலைப் பணிகளில் 100% மாநில இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்றப்படும்.

வருமான வரி

* தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு இப்போது 20% வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனி ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வருமான வரி வசூலிக்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு வருமானத்திற்கு தற்போது 30% வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20% வருமான வரி வசூலிக்கப்படும்.
* ரூ-.15 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு வருமானத்திற்கு இனி 30% வருமான வரி வசூலிக்கப்படும்.
* தனிநபர்களின் சேமிப்பை ஊக்-குவிக்கும் வகையில், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் ரூ.2 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜி.எஸ்.டி.

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.
* ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.
* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
* 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 10 விழுக்காடாக குறைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே 10% வரி விதிப்பு அல்லது முழுமையான வரி விலக்குப் பிரிவில்தான் இருக்கும்.
* இப்போது 28% வரி விகிதத்தில் உள்ள பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 25 விழுக்காடாக குறைக்கப்படும். மகிழுந்துகள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்டவை மட்டுமே இந்த வரி விதிப்புப் பிரிவில் இருக்கும்.
* தங்கம் மீதான 10% இறக்குமதி வரி ரத்து செய்யப்படும். இதனால் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,000 வரை குறையும்.

மது – புகையிலை ஒழிப்பு

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.
* பொது இடங்களில் புகைப் பிடிக்க மருத்துவர் அன்புமணி இராமதாசு காலத்தில் விதிக்கப்பட்ட தடை மேலும் கடுமையாக்கப்படும்.
* புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.
* பள்ளிகள், கல்லூரிகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும், 18 வயது நிறைவடையாதவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக செயலாக்கப்படும்.

கல்வி

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
* வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும். இதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் பகிர்ந்து கொள்ள வகை செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு கற்பித்தல் முறையை எந்த வகையிலும் மேம்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* தரமான ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம்தான் தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும். அதை உணர்ந்து, உலக அளவிலான அனுபவங்களின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்தும்.
* தொலைதூரங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரியர் குடியிருப்புகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

உயர் கல்வி

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.
* மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும்.
* வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.
* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (மிஸீபீவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ ஷிநீவீமீஸீநீமீ ணிபீuநீணீtவீஷீஸீ ணீஸீபீ ஸிமீsமீணீக்ஷீநீலீ – மிமிஷிணிஸி) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.

நலவாழ்வு

* நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்குவதற்கு வசதியாக, இங்கிலாந்து நாட்டில் நடைமுறையில் உள்ள தேசிய சுகாதார சேவைக்கு இணையாக இந்தியாவில் இந்திய தேசிய சுகாதார சேவை (மிஸீபீவீணீ ழிணீtவீஷீஸீணீறீ பிமீணீறீtலீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ – மிழிபிஷி) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம் அமைக்கப்படும்.
* இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 2 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* தொற்றா நோய்களை கட்டுப்படுத்த தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முழுமையான பயனளிக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, தொற்றா நோய்களை கட்டுப்படுத்தத புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில்துறை வளர்ச்சி

* இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.
* இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும்.
* வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் சிறப்பான தொழில் கொள்கையை வகுத்து செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவிகளை வழங்கும்.
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த விலையில் நிலம், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
* தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கூட்டாக இணைந்து தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு மானியமும் வழங்க பா.ம.க. பாடுபடும்.
* வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் சொந்த மாநிலங்களில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ரோபோடிக் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், இணைய உலகம், தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சுமுறை, குவாண்டம் கணினியியல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை இந்தியாவில் விரைவுபடுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
* நான்காவது தொழில் புரட்சி காரணமாக, வேலையிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, உயர்கல்வி மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்யப்படும்.

பட்டாசு ஆலைகள்

* பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துரை பெற்று இச்சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு ஆலைகள், அவற்றின் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.
* பட்டாசு ஆலை விபத்துக்களின் போது, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும். தொழிலாளர்களுக்கு அனைத்து வகை காப்பீடுகளும் செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும்.

வேலைவாய்ப்பு – அரசு ஊழியர் நலன்

* அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.
* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10% ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* பஞ்சாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் கொத்தடிமை முறையை ஒழிக்கவும், 480 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து நிலை தொழிற்சாலைகளிலும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.

மாதம் ரூ.4000 நிதியுதவி

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

உட்கட்டமைப்பு மேம்பாடு

* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி தேவைப்படும். இதை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து திரட்டுவதற்கு உதவவும், இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மானியமாக வழங்கவும் மத்திய அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும். இத்தகைய சாலை திட்டங்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ள வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* சென்னை & சேலம் இடையிலான எட்டுவழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் உழவர்களின் விளை நிலங்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை பா.ம.க. கோரும்.
* திண்டிவனம் & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்க பா.ம.க. பாடுபடும்.
* மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் இடைவிடாத முயற்சியால், அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட தருமபுரி & மொரப்பூர் இடையே புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை ஓராண்டில் நிறைவேற்றி முடிக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.
* தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்காததால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அனைத்து தொடர்வண்டித் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து செயல்படுத்தி முடிக்க பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான அனல்மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைக் களைந்து, மின் திட்டங்களைச் செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* தமிழகத்தில் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் மூலம் வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுத்தருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றம்
* தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மனித வாழ்நிலை குறியீட்டின் அடிப்படையில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்கள் அடையாளம் காணப்படும். அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மாநிலத்திற்கு உள்ளேயே நிலவும் வேறுபாடுகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் சரிசெய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக 371 (ரி) என்ற தனிப்பிரிவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க பா.ம.க. பாடுபடும்.

உள்ளாட்சி & கிராமப்புற வளர்ச்சி

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் போன்று கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.
* மதுவிலக்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி மதுவிலக்குச் சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.
* கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளோ, வேறு திட்டங்களோ செயல்படுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சிகள்

* இந்தியாவின் முதல்நிலை நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரங்கள் திட்டம், இரண்டாம் நிலை நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
புதிய நகர்ப்புற செயல்திட்டம்
* ஐக்கிய நாடுகள் அவையால் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “புதிய நகர்ப்புற செயல்திட்டம்” என்பது நகர்ப்புற வாழ்வையும், சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தக் கூடிய மிக முதன்மையான செயல்திட்டம் ஆகும். வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவிலும், இந்தியாவிலேயே நகரமயமாதலில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலும் இந்த செயல்திட்டம் முழுமையாகவும், விரைவாகவும் செயலாக்கப்பட பா.ம.க. பாடுபடும்.

தமிழ் ஆட்சிமொழி

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க பா.ம.க. பாடுபடும்.
* அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.
* உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரச்சார சபாவுக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழ் இலக்கமுறை நூலகம்

* சென்னை எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் தமிழ் இலக்கமுறை நூலகம் அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* தமிழ் இலக்கமுறை நூலகத்திற்கு சி.பா.ஆதித்தனார் பெயர் சூட்டப்படும்-.
* தமிழ் இணைய கல்விக் கழகத்தை முழுமையான பல்கலைக் கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

7 தமிழர்கள் விடுதலை

* ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுவாழ் தமிழ் நலன்
* அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* வளைகுடா நாடுகளில் கடைபிடிக்கப்படும் புதிய கொள்கை காரணமாக, வேலை இழக்கும் தமிழர்களுக்கு மாற்றுவேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கச்சத்தீவு மீட்பு

* மீனவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்துச் சிக்கல்களையும் உடனடியாக களைவதற்கு வசதியாக, மத்திய அரசில் மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுக்கும்.
* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

* இந்தியாவில் தேர்தல் நடைமுறையும் முடிவுகளும் ஐயத்திற்கு இடமின்றி இருப்பதை உறுதி செய்ய மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
* தேர்தல்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகப் போவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்.

பெண்கள் பாதுகாப்பு

* நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்.
* நாடு முழுவதும் காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கும். இத்தகைய இடஒதுக்கீடு வழங்கும் மாநிலங்களின் காவல்துறைகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.
* பொதுத்துறை வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல்

* சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்

* பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும்கூட, மிக முக்கியமான காரணம் பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் கருதுவதுதான். இந்த நிலையை மாற்றவும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

சுயமரியாதை திருமணம்

* தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சுயமரியாதை திருமணத்திற்கு அகில இந்திய அளவிலும் சட்டப்படியாக அங்கீகாரத்தைப் பெற்றுத்தர பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

விளையாட்டு

* மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன், பாடத்திட்டங்களில் விளையாட்டும் சேர்க்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. வலியுறுத்தும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும். விளையாட்டை ஊக்குவிக்க மாவட்ட அளவில் அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுரை வழங்கும்.
* அனைத்து வட்டங்களிலும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் வகையில், பல்முனை பயன்பாட்டு உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்க பா.ம.க. பாடுபடும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

* அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாய்வுப்பாதைகள், பிரெய்லி முறையிலான அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர பா.ம.க. பாடுபடும்.
* பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்றுவர வசதிகள் செய்துதரப்படும். பேருந்துகளிலும், புறநகர் தொடர்வண்டிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அதிக வசதிகள் செய்துதரப்பட பா.ம.க. வலியுறுத்தும்.

முத்தலாக்

* முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.
* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள அனைத்துப் பணியிடங்களையும் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, அவற்றை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதிசெய்யும்.
* மனிதக் கழிவுகளையும், கழிவுநீர் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும். இந்தப் பணிகளில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கத் திட்டம் வகுக்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது

* இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாநில அரசின் மூலமாக தஞ்சாவூரில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க பா.ம.க. பாடுபடும்.
* திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத் விருது பெற்ற நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தும்.
* மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!