பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழா புகைப்படக் கண்காட்சி ,பேரணியுடன் துவங்கியது.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படக்கண்காட்சி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
பெரமபலூர் மாவட்ட போக்குவரத்துத் துறையின் சார்பில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 27வது சாலை பாதுகாப்பு வாரவிழா அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், புகைப்படக்கண்காட்சி, விழிப்புணர்வு பேரணி ஆகியவை இன்று நடத்தப்பட்டது.
புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் .தரேஸ் அஹமதுவும், விழிப்புணர்வு பேரணியை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசியும் துவக்கி வைத்தனர். புகைப்படக்கண்காட்சியில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சாலை விதிகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலுமான செய்திகள் அடங்கிய பதாகைள், புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கபட்டிருந்தன.
இதனை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்துமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கோஷங்களையும் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியவாறும் சென்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் இப்பேரணி முடிவடைந்தது.
மேலும், பேருந்துகளின் ஒளியைக் கட்டுப்படுத்தும் வகையிலான கருப்பு வில்லைகளையும் பேருந்து முகப்பு விளக்குகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஒட்டினர்.
இந்நிகழ்ச்சியில் நகர் மன்றத் தலைவர் சி.ரமேஷ், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.