பெரம்பலூர் : மங்கலமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மீட்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகள் ஆனந்தி(15), இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை திடீரென ஆனந்தி காணாமல் போனார். இதனையடுத்து அவரது குடும்பத்தார் ஆனந்தியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதில் அவர்களது வயலில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆனந்தி குடும்பத்தார் மங்கலமேடு காவல் நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தியின் உடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, ஆனந்தியின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.