Central Government Sansad Adarsh Gram Yojana Model Village Project Public Relations Special Camp
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டணம் ஊராட்சியில் மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் குமரசேன் வரவேற்றார். முகாமில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமை வகித்து பேசியதாவது:
பெரியபட்டிணம் ஊராட்சி முன்மாதிரி கிராம திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கூட்டம் தள்ளிபோனது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். பெரியபட்டிணம் ஊராட்சி மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரி ஊராட்சியாக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் கொண்டு வர சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்திட்டம் ஏன் தேவையில்லை என கூறுங்கள் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு சிறப்பு முகாமில் 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும். கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேச உள்ளேன்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார் முன்னிலை வகித்து பேசும்போது :
கடந்த 3 ஆண்டுகளில் பெரியபட்டிணம் ஊராட்சியில் 865 நலத்திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் வழிகாட்டுதலில் நடைபெற்று உள்ளன. மகாத்மா காந்தி நினைவு திட்டத்தின் கீழ் ரூ.2.09 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. சாலை வசதிகள், தெரு விளக்குகள், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டத்தில் 64 வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன. 5 ஊரணிகள் மராமத்து பணிகள் நடந்துள்ளன. முன்மாதிரி கிராமமாக பெரியபட்டிணம் ஊராட்சி திகழ ஒத்துழைப்பு தாருங்கள், என்றார்.
திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர். புல்லாணி, ஒன்றிய கவுன்சிலர் புரோஸ்கான், குழு தலைவர் சிவலிங்கம் ஊராட்சித் தலைவர் திருமதி.அக்பர் ஜான் பீவி,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்
.