பெரம்பலூர் : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் உரிய படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 30.11.2015க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும், விண்ணப்பிக்கும் நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.09.2015 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட (அ) பழங்குடியினத்தவர்கள் 30.09.2015 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும், தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!