மே 5. முதல் 10 ம் தேதிவரை பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு வீடாக வாக்களார் சிலிப் வழங்கப்படுகிறது ; பூத் ஏஐண்டுகள் வோட்டர் சிலிப்பை வழங்கக்கூடாது.

schedule
2016-05-03 | 15:03h
update
2026-06-23 | 19:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களுடான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்,

பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் விஷ்ணு முன்னிலையிலும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது:

நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு 147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்களும், 148. குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்களும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், சாய்தளம், கழிப்பறை, மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாமியானா பந்தல் அமைக்கவும், மயக்கம் – உடல்சோர்வு உள்ளிட்ட நிலைக்கு ஆளாகும் வாக்காளர்களுக்கு எலக்ட்ரால் பவுடர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க உதவும் வகையில் 93 மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

93 மையங்களில் மொத்தம் 296 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 180 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 116 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.

மே மாதம் 5ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்துப்பகுதி வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வோட்டர் சிலிப் வழங்கப்படவுள்ளது. அவ்வாறு வழங்கப்படும்போது கட்சிகளின் பூத் ஏஐண்ட் அலுவலர்களுடன் செல்லலாம்.

ஆனால் பூத் ஏஐண்டுகள் வோட்டர் சிலிப்பை வழங்கக்கூடாது.

மே 10 ஆம் தேதிக்குப்பிறகு வழங்கப்படாமல் உள்ள வோட்டர் சிலிப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். வோட்டர் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவந்து காட்டி வாக்களிக்கலாம்.

தேர்தல் பணிக்காக இரண்டு மத்திய கம்பெனிகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஓரிரு தினங்களில் வருகைதர உள்ளார்கள். பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் 915 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், முன்னாள் படைவீரர்கள், என்.சி.சி. அமைப்புகளில் உள்ளவர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள 6 பறக்கும் படைகளிலும் தலா ஒரு ‘பி’ குரூப் நிலையிலுள்ள மத்திய அரசு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மொத்தம் ரூ.45 லட்சத்து 39 ஆயிரம் 582 பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் அந்த பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் இதர மீது இதுவரை 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 117 புகார்கள் வரப்பெற்றுள்ளது.

நேர்மையான, கண்ணியமான தேர்தலை நடத்த அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது, கூடுதல செலவினப்பார்வையாளர் பிஜுதாமஸ். ஐ.ஆர்.எஸ், வருமான வரித்துறை குறித்த செயல்பாடுகளை கண்காணிக்கும் சிறப்பு அலுவலர் ராமலிங்கம்.ஐ.ஆர்.எஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாரிமுத்து (பொது), கீதா(தேர்தல்), சிலப்பன்(கணக்குகள்), தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் மகாராஜன், செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 19:08:03
Privacy-Data & cookie usage: