பெரம்பலூர், ஜுன்.7: வேப்பந்தட்டை அருகே நேற்றிரவு முன் தினம் இடிதாக்கி 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் ரூ: 5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50), விவசாயி. இவர் தனது வயலிலேயே குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது மகன் வழி பேரன் பாரதிக்கு பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடி கொண்டு இருந்தனர். அப்போது காற்றுடன் மழை பொழிய துவங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திடீரென்று ராஜாவின் மருமகள் தனலட்சுமி குடிசை மீது பயங்கர சத்தத்துடன் இடிதாக்கியது. உடனே குடிசை தீப்பற்றி எரிய துவங்கியது. இதை கண்ட பக்கத்து வயலில் வசிக்கும் ராமக்கிருஷ்ணன் செல்போனில் ராஜாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது வெளிய வந்த பார்த்த போது இடி அவரது வீட்டில் தாக்கி உள்ளது என்பது தெரியவந்தது. மின்சாரம் இல்லாத போதும் கூட பல்புகள் வெடித்து சிதறியது நினைவுக்கு வந்தது. அதே வேளையில் கொழுந்து விட்டு எரிந்த தீ வேகமாக மருமகள் தனலட்சுமி குடிசையில் இருந்து வேகமாக ராஜாவின் வீட்டுக்கும் தீ வேகமாக பரவியது. தீயை தடுக்க முடியமால் தவித்தனர். அப்போது ஏற்பட்ட தீ, மழை பெய்து கொண்டிருக்கும் போதே, வீட்டினுள் இருந்த 28 மூட்டைகள் மஞ்சள், 10 மூட்டை நிலக்கடலை, 8 சவரன் தங்க ஆபரணங்கள், ரொக்கப் பணம் 50 ஆயிரம் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் உடைமகள் ஆகியவற்றை இடிதாக்கி ஏற்பட்ட தீ முழுமையாக கபளீகரம் செய்தது. இதில் நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ராஜாவின் மனைவி சரஸ்வதி, மருமகள் தனலட்சுமி, பேரக் குழந்தைகள் பாரதி, ஏசிகா ஆகியோர் இடி விழுந்த வீட்டில் இல்லாமல் மற்றொரு வீட்டில் தங்கி இருந்ததாலேயே உயிர் தப்பித்தனர்..
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். நிராயுத பாணியாக நின்றவர்களுக்கு அரசு சார்பில் வழங்ப்படும் இடர் கால நிவாரண உதவிகளை வழங்கினர்.
இடி தாக்கிய சம்பவம் அக்கம் உள்ளவர்களையும் அவ்வூர் மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நேற்று காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெரம்பலூர் 3, வேப்பந்தட்டை 4 , தழுதாழை 7 மி.மீ, செட்டிகுளம் 0, பாடாலூர் 0.