பெரம்பலூர்: வேப்பூர் அரசு கல்லூரியில் இளங்கலை கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 60 மாணவியர்கள் கொண்ட தலா ஒரு வகுப்பு வழங்க பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கல்வி ஆண்டு (2015 – 2016) முதல் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி மகளிர் கலைஅறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம், இளங்கலை இயற்பியல், இளங்கலை வேதியியல் ஆகிய 3 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்ட மாணவிகளுக்கு உயர்கல்வி கற்க பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 9 பாடப்பிரிவுகளிலும் மாணவிகள் சேர்க்கை முடிவடைந்துள்ளது.
அதனடிப்படையில் முதலாம் ஆண்டில் மட்டும் 490 மாணவியர்கள் இந்த ஆண்டில் சேர்ந்துள்ளனர். இருப்பினும் மேலும் அதிக அளவிலான மாணவிகள் இக்கல்லூரியில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளதை கருத்தில் கொண்டு தற்போது 120 மாணவியர்கள் கூடுதலாக பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாணவிகள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அக்கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.