பெரம்பலூர்: 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூரில் புதிய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கான கட்டடம் புதிய பேருந்து நிலையம் மாவட்ட மைய நூலகம் எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜுன். 25. அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் ரெட்டி, அங்கிருந்த மாணவ,மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் கல்வித்தகுதிகளை பதிவு செய்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்து, பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 11.02.1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவரை இவ்வலுவலகத்தில் 75,163 பேர்பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 36,599 ; பெண்கள் 38,564 . மேலும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவில் 2460 பயனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் 499 பயனாளிகளும் தற்பொழுது பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் தரை தளம் மற்றும் முதல்தளத்தை உள்ளடக்கியது. இதில் தரைத்தளத்தில் நுழைவு பகுதி, கணினி அறை, பதிவு மற்றும் புதுப்பித்தலுக்காக பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனித்தனி அறைகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறை, பதிவறை, அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் (ஆண்கள், பெண்கள்) ஆகியவை உள்ளது.
அதேபோல முதல் தளத்தில் பயிற்சி வகுப்பறை, படிக்கும் அறை, பதிவேடுகள் அறை, பயிற்றுநர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி அறைகள், மற்றும் கழிவறைகள் ஆகியன உள்ளன.
மேலும் இவ்வலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தரம் – ஐஐடி-க்கு இலவச பயிற்சி வகுப்புகளும் தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது.