2 weeks suspension of cattle markets due to the intensification of komari disease near Namakkal
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள தகவல்:
தற்போது பருவ நிலை மாற்றங்களாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், கால்நடைகளில் கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு கால்நடையிடமிருந்து மற்றொரு கால்நடைக்கு இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் நோய் பாதித்த கால்நடைகளை விற்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என விவசாயிகளுக்கு கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து கால்நடைகள் சந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளதால், மாவட்டத்தில் 2 கால்நடை சந்தைகளை 2 வாரங்களுக்கு நிறுத்திவைத்தி வைக்கப்படுகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சந்தைகளிலிருந்து தொற்று நோய் உள்ள கால்நடைகளை வாங்கினால் மற்ற இடங்களில் உள்ள கால்நடைகளுக்கும் நோய் பரவும். எனவே, தொற்று நோய் பரவாமல் இருக்க நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும் மோர்பாளையம் (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை) மற்றும் புதன்சந்தை (செவ்வாய், புதன் கிழமை) ஆகிய கால்நடை சந்தைகளில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு வர்த்தகம் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.