2024 எம்.பி தேர்தல், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்க அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: பெரம்பலூர் கலெக்டர் அறிவுறுத்தல்!

schedule
2024-03-04 | 19:26h
update
2024-03-04 | 19:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2024 MP elections, officials must cooperate for transparent and fair conduct: Perambalur Collector instructions!

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ல் வரும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அதில் கலெக்டர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 37 மண்டல அலுவலர்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 34 மண்டல அலுவலர்களும் என மொத்தம் 71 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டல அலுவலர் தலைமையிலும் ஒரு மண்டல உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டலத்தின் விவரம், உடன்நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் விவரம், ஈப்பு விவரம் ஆகியவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களது மண்டலத்திற்குடப்பட்ட வாக்குசாவடி மையங்கள் விவர பட்டியலினை உதவி தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளவேண்டும்.

Advertisement

மண்டலத்திற்குட்பட்ட வாக்குசாவடி மையங்கள், வட்டாட்சியர் / தேர்தல் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்களின் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மண்டல அலுவலாகளும் தேர்தல் பொருள்கள் பெறுவதில் உள்ள நடைமுறைகளை நன்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும், தங்களது மண்டலத்திற்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சென்று சேர்ந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் நாளன்று மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் முதலில் மண்டல அலுவலர்கள்தான் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் தான் டெக்னிக்கல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அதனை சரி செய்வதா அல்லது வேறு இயந்திரம் அனுப்பிட வேண்டுமா என்பது உறுதி செய்யப்படும் .

ஆகவே, மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல், புள்ளி விவரங்கள் அனுப்புதல் போன்ற அனைத்து பணிகளிலும் தெளிவான புரிதலுடன் இருத்தல் அவசியம்.

மண்டலத்திற்குட்பட்ட வாக்குசாவடி மையங்களின் சாலை போக்குவரத்து வழி விவரம் தெரிந்திருக்க வேண்டும் (Route), அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை கண்காணித்துக் கொள்ள வேண்டும், வாக்குசாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் கட்சி அலுவலகம் மற்றும் சின்னங்கள் வரையப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பதற்றமான வாக்குசாவடிகள் (vulnerable and critical Polling Station )பட்டியலினை பெற்று அந்த அந்த வாக்குசாவடி மையத்தினை நன்கு கண்காணித்திட வேண்டும். புதிய வாக்குசாவடி மையங்கள் ஏதும் தொடங்கப்பட்டு இருந்தால் அவற்றின் விவரம் குறித்து அப்பகுதி மக்கள் அறிந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், கைப்பிடியுடன் கூடிய நிரந்தர சாய்தள அமைப்பு, குடிநீர், கழிவறை வசதி, மின்சார வசதி, தேவையான இருக்கை வசதிகள், வாக்காளர்களுக்கு நிழலில் அமர வசதி, தனித்தனியான உள் மற்றும் வெளியேறும் நுழைவுவாயில் வசதிகள், வாக்காளர் உதவி மையம் ,நடக்க இயலாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வந்தால் அவர்களை அழைத்துச்செல்ல மூன்று சக்கர வாகனம் மற்றும் தன்னார்வலர்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் நடைபெற அனைத்து அலுலவர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும், என தெரிவித்தார். இதில் தேர்தல் வட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 16:18:43
Privacy-Data & cookie usage: