7 தமிழர் விடுதலைக்கு தடையில்லை: ஆளுனர் இனியும் தாமதிக்கக் கூடாது! பா.ம.க ராமதாஸ்

schedule
2019-05-09 | 14:49h
update
2019-05-09 | 14:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

7 Tamil liberation has no objections: Governor can no longer delay! PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை விதிக்க முடியாது என்றும், இவ்விஷயத்தில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். 7 தமிழர் விடுதலைக்கு எதிராக அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில், அவர்களை விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9&ஆம் தேதி பரிந்துரை செய்தது. அது ஆளுனரின் ஆய்வில் இருந்த நிலையில், அப்பாஸ் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப் படும் வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

அந்த வழக்கைக் காரணம் காட்டித் தான் 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்தார். அத்தகைய சூழலில் 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகி விட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போதே, இவ்வழக்கு எந்த நேரமும் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், அதுவரை காத்திருக்காமல் 7 தமிழர்கள் விடுதலை குறித்த அரசாணையை தமிழக ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

அந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 7 தமிழர் விடுதலைக்கு எதிராக அப்பாஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் நீக்கப் பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 7 தமிழர் விடுதலை குறித்து, அமைச்சரவை அளித்துள்ள பரிந்துரைப்படி ஆளுனர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 243 நாட்கள் ஆகி விட்டன. இதுபற்றி பல்வேறு கட்டங்களில் வினா எழுப்பப்பட்ட போதெல்லாம், ஆளுனர் மாளிகைத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட காரணம்… 7 தமிழர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது தான். அந்த வழக்கு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், 7 தமிழர் விடுதலைக்கு தடையில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முதன்மையானது 7 தமிழர்கள் விடுதலை ஆகும். இந்த கோரிக்கையை கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வலியுறுத்தியதுடன், மனுவாகவும் அளித்தேன். அதன்பின்னர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் குறிப்பிட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூடுதல் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் பயனாக 7 தமிழர்களின் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரிகிறது.

7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 8 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் அவர்களின் விடுதலையை ஆளுனர் இனியும் தாமதிப்பது முறையல்ல. அரசின் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க அரசியல் சட்டத்தில் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதைக் காரணம் காட்டி 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தக் கூடாது. விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுனர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 7 தமிழர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் ஆளுனர் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 20:49:39
Privacy-Data & cookie usage: