BC, MBC, DNT students can apply to join school college hostels: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் 16, கல்லூரி/ பாலிடெக்னிக் விடுதிகள்02 மற்றும் மாணவியர்களுக்கு பள்ளி விடுதிகள்10, கல்லூரி/ பாலிடெக்னிக் விடுதிகள் 06 என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்புவரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள்வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள்/ பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
இந்த தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 21.07.2022 க்குள்ளும்/ கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 31.07.2022 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் அளிக்கலாம்.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப்பயில அனுமதிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.