Beginning on March 1st till the 21st of foot and mouth disease vaccine
பெரம்பலூர்.பிப்.23- கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். பால் கறவை குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறந்துவிடும்.
எனவே, இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இம்முகாம் மூலமாக மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 050 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 12-வது சுற்றின் கீழ் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆதலால் கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வருகை தரும் பொழுது 4 மாத வயதுள்ள கன்று முதல் சினை, மற்றும் கறவை பசு உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் போட்டு பயன்பெற வேண்டும் என கால்நடைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.