Crop insurance for paddy samba crops; Perambalur Collector Venkatapriya
பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்குய 15.11.2021 தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.537- காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பீரிமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.