திமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடியபோகிறது : பெரம்பலூரில் பாமக ராமதாஸ்!

schedule
2019-03-29 | 02:54h
update
2019-03-29 | 09:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK’s chapter ends with the election: PMK founder Ramadoss at Perambalur

தமிழகத்தில் நடைபெறும் இந்த லோக்சபா தேர்தலோடு திமுக அத்தியாயம் முடியபோகிறது என் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக, அதிமுக சார்பில் வேட்பாளரா சிவபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டணி சார்பில், கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: நாட்டில் பல்வேறுவிதமான கொள்ளையர்கள் உள்ளனர். இதில் இந்த தொகுதியில் நிற்பவர் ஒரு கல்வி கொள்ளையர். அவரது கல்வி கொள்ளையை எதிர்த்து பாமக வழக்கு தொடர்ந்து அதன் காரணமாக அவர் சிறை சென்றார். அதனால் அவருக்கு பாமக என்றால் பிடிக்காது. அவர் நடத்திவரும் தொலைக்காட்சியில் பாமகவை பற்றிய செய்திகளை வெளியிட மாட்டார்கள். அப்படியே வெளியிட்டாலும் தவறான செய்தியையே வெளியிடுவார்கள். ஒரு சாதாரண கிளர்க் ஆக இருந்தவர் இன்று ரூ.10 லட்சம் கோடி நிதி குவித்துள்ளார். அந்த கல்வி கொள்ளையரை இந்த தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

Advertisement

அதிமுகவுடனான கூட்டணி இயற்கையான கூட்டணி. சகோதரத்துவடன் தொண்டர்கள் பழகுவார்கள். திமுகவுடனும் கூட்டணி வைத்திருக்கிறோம். அவர்கள் மாலை போட்டு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துவிடுவார்கள்.

பின் தங்கிய இந்த தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றால் ஆளுங்கட்சியான அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆட்சியில் இல்லாத எதிர்கட்சிகளால் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டு வர முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தவன் நான்தான். ஒரு கூட்டத்தில் நானும் கருணாநிதியும் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்களே எல்லா சுமையையும் சுமக்க வேண்டாம். உங்களது பொறுப்பை கொஞ்சம் ஸ்டாலினிடம் கொடுங்கள் என்றேன். அடுத்த மாதம் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனார். இது குறித்து ஸ்டாலின் பல்வேறு இடங்களில் என்னைப்பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

இந்த தேர்தலோடு திமுகவின் அத்தியாயம் ஒரு முடிவுக்கு வரும். நான் ஆரூடம் சொல்லவில்லை. எதார்த்தத்தை சொல்கிறேன். திமுக ஒரு வன்முறைக் கட்சி. இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்தில் கொலை செய்ய முயன்றவர்கள். காமராஜரை தரக்குறைவாக விமரிசித்தவர்கள். மதுரையில் நாளிதழ் அலுவலகத்தை எரித்து 3 பேரை கொலை செய்தவர்கள்.

பெரம்பலூரில் கூட பியூட்டி பார்லர் நடத்திய பெண் ஒருவரை தாக்கியவர்கள். இந்த ஊர்க்காரரான சாதிக் பாட்ஷா என்பவர் மறைவுக்கு விளம்பரம் கொடுத்த அவரது மனைவியை மிரட்டுபவர்கள். அவர்களுக்கு வாக்களிப்பதும், புராண கதையில் வரும் பத்மா சூரன் போல் தனது தலையில் கை வைத்து தன்னையே அழித்துக் கொள்வதும் ஒன்றுதான்.

திமுக என்றாலே வன்முறை கட்சி, நிலஅபகரிப்பு கட்சி என்று பெயர். அந்த அளவிற்கு நாட்டில் வன்முறையை ஏற்படுத்தியதும், வன்முறையை தூண்டிய கட்சி திமுக. அதே போல அடுத்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் திமுக நிகர் திமுக தான். வேட்பாளர் சிவபதியின் முத்தரையர் சமூகம் உட்பட108 சமூகங்களுக்கு போராடி இடம் வாங்கி கொடுத்தேன். இதையெல்லாம் நீங்கள் எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 3 சக்திகளை கொண்டவர்கள் பெண்கள் தான். தீய சக்திகளை அழிக்கும் சக்தி பெண்களிடம் தான் உள்ளது. தற்போது பெண்கள் தான் அதிகளில் மெஜாரிட்டியாக உள்ளனர். ஆண்கள் மைனாரிட்டியாகத்தான் உள்ளனர். எனவே பெண்கள் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுபோட்டு வெற்றிப்பெற வைக்கவேண்டும் என்றார்.

கூட்டத்தில் பாமக துணை பொதுசெயலாளர் வைத்தி, தேமுதிக மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், பாஜக மாவட்ட தலைவர் சாமிஇளங்கோவன், தமாகா மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜானாத்தனன், வக்கீல் சத்தியசீலன் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 12:47:53
Privacy-Data & cookie usage: