Educated First Generation Entrepreneurs Start Business Grant: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க, தமிழக அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் செயல்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐடிஐ தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.

கடன் பெறுவர்களில் பொது பிரிவினர் ஆண்களில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு 5 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். கடனுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திட்ட இலக்கீடாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2021-22 ஆம் நிதியாண்டில் 72 நபர்கள் பயன்பெற ரூ.4.8 கோடி மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு 04328 – 225 580, 224 595 என்ற தொலைபேசியிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!