பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரிலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் வேலூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டில் பிளாஸ்டிக் பையால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் சடலம் கிடப்பதை அப்பகுதியிலுள்ள கீழக்கனவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிலர்பார்த்து விட்டு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் பெரம்பலூர்தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில், போலீசார் வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து போய் எலும்புக்கூடாக கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.
மேலும் இது குறித்து வேலூர் விஏஓ.,சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிந்து இறந்த போனது பெண் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டவரா? இந்த சடலம் எப்படி இங்கு வந்தது? யார் வீசி சென்றது? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்.
இதனிடையே பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்டு நிலையில் சுடுகாட்டில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவலறிந்து அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டதால் வேலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.