Following Chief Minister S. Joseph Vijay’s directive, MLA Sivakumar conducts inspections at the Perambalur Amma Unavagam and the Sub-Registrar Office.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம், பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெரம்பலூர் எம்.எல்.ஏ சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
அதனடிப்படையில், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை பெரம்பலூர் எம்.எல்.ஏ., கி.சிவக்குமார் பார்வையிட்டார். உணவுப் பொருட்கள் வைப்பறை, சமையற்கூடம், உணவருந்தும் இடம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட அவர், உணவகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், கழிவு நீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். பத்திரப்பதிவு பணிக்காக வந்திருந்த பொது மக்களிடம் பத்திரப்பதிவில் ஏதேனும் சிரமங்கள், காலதாமதம் ஆகின்றதா எனவும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள பத்திரப்பதிவு பணிகள் குறித்து பொறுப்பு பத்திரப்பதிவு அலுவலர் முருகனிடம் கேட்டறிந்தார்.
பத்திரப் பதிவிற்கான விண்ணப்பித்திருந்த மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ சிவக்குமார், விண்ணப்பித்து எத்தனை நாட்கள் ஆகின்றது என்றும், எதனால் உங்களுக்கான பத்திரப்பதிவு தாமதாகின்றது என தகவல் தெரிவித்தார்களா என்றும் கேட்டறிந்தார். பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பதிவு செய்து கொடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற எம்.எல்.ஏ நகராட்சித் தலைவர் மற்றும் நகராட்சிப் பொறியாளரை சந்தித்து, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தவெக கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.