Freedom fighters request the Redressal meeting Conduct immediately
நாமக்கல் மாவட்டத்தில் 16 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுகள் குறைகேட்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சங்கம் மூலம் வழங்குவது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மட்டும் தனி பந்தல் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும்.
மொழிப்போர் தியாகிகளை தனிப் பந்தலில் அமரவைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஓதுக்கி அதில் நாமக்கல் மாவட்டத்தின் அருங்காட்சியகம் வைக்க வேண்டும். இதில் நாமக்கல் மாவட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் உருவப்படத்தையும் வைக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கத்திற்கு அலுவலகம் வைத்துக் கொள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஓதுக்கீடு செய்ய வேண்டும்.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் வாரிசுகள் குறைகேட்பு கூட்டம் 9.8.2017இல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 மாதங்களாக இந்த கூட்டம் கூட்டப்படவில்லை. குறைதீர்வு கூட்டத்தை கூட்ட வேண்டும் என சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை கூட்டத்தை கூட்ட நடவடிக்கையெடுக்கவில்லை.
இதனால் கலெக்டர் காலாண்டிற்கு ஓருமுறை தவறாமல் கூட்டத்தை கூட்டி குறைகளை கேட்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.