Illegal water Sales from the public well near Perambalur: Public road Blockcade
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யாமல், அரசியல்வாதிகள் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்ய உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை கண்டித்து பேரளி கிராம பொதுமக்கள் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு குடங்களுடன் கி.மீ கணக்கில் அலைந்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் தண்ணீர் லாரிகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்கள் நெடுந்தூரம் சென்று சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பேரளி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய 9 கிணறுகளும், 19 போர்வெல் கைப்பம்புகளும் உள்ளது.
இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக தற்போது 7 கிணறுகளில் தண்ணீர் இல்லை. அரசு நிர்ணயம் செய்ததை விட குறைவான அளவு ஆழம் கொண்ட 19 போர்வெல் கைப்பம்புகளும், பழுது ஏற்பட்டு சீர் செய்யாமல் கிடப்பில் உள்ளது. ஊருக்குள் இருக்கும் ஒரு கிணற்றிலும், ஊருக்குள் வெளியே இருக்கும் மற்றொரு கிணற்றிலும் மட்டுமே தண்ணீர் பொதுமக்களுக்கு தண்ணீர் ஆதராமாக உள்ளது.
ஊருக்கு வெளியே உள்ள கிணறு நெடுந்தூரம் என்பதால் அங்கு பொது மக்கள் தண்ணீர் எடுக்க சென்று வருவது சிரமம் என்பதால் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கிணற்று தண்ணீரை சட்ட விரோதமாக லாரிகள் மூலம் விற்று வருகிறார் என்றும் அதற்கு அதிகாரிகள் துணை நிற்பாதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஊருக்குள் இருக்கும் கிணற்றில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் பேரளி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக தடைபட்டு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் விநியோகத்தை சீராக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பேரளி கிராம பொது மக்கள் 300க்கும் மேற்ப்பட்டோர் ஒன்று திரண்டு இன்று பெரம்பலூர்-அரியலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து கொடுப்பதுடன், ஊருக்கு வெயில் உள்ள கிணற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து போராட்டத்தை கைவிட செய்தனர்.
இந்த தீடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெகுதூரம் அணிவகுத்து நின்றன.