பெரம்பலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

schedule
2017-03-19 | 12:56h
update
2026-06-25 | 06:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur approximately Rs 70 lakh worth of free bicycles to the government school students

பெரம்பலூர் : மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 1,717 மாணவ-மாணவிகளுக்கு ரூ.69,79,455; மதிப்பிலான விலையில்லா மதிவண்டிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:

மறைந்த மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். குறிப்பாக விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை, புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, இடைநிற்றலை குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட 14 வகையான திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும்.

Advertisement

கிராமபுற மாணவ-மாணவிகள் தொலைதூம் நடந்தே சென்று கல்வி கற்கும் நிலையினை மாற்றி அவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கி வருகின்றது தமிழக அரசு. நமது பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வித்துறைக்கு என்று எண்ணற்ற சிறப்புத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கின்றது.

வேப்பந்தட்டையில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூரில் பெண்களுக்கான கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட அளவிலான மற்றும் ஒன்றிய அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என பல்வேறு திட்டங்கள் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா (ஜெ.ஜெயலலிதா) அவர்களால் செயல்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாது தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களையும், புதிய அரசுப் பள்ளிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் நமது பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். அரசின் இதுபோன்ற திட்டங்களை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என பேசினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி, தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) பாலு உள்ளிட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 06:39:35
Privacy-Data & cookie usage: