In Perambalur, MLA Prabhakaran inaugurated a photo exhibition explaining the welfare schemes of the Tamil Nadu government and provided welfare assistance.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை எம்.எல்.ஏ பிரபாகரன், டி.ஆர்.ஓ அங்கயற்கண்ணி தலைமையில் தொடங்கி வைத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி”என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று துவங்கியுள்ள இந்த கண்காட்சியானது 23.01.2023 வரை நடத்தப்படவுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் சமுதாயப் பொங்கல் சமைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாரப்பட்டது.

இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பெரம்பலுார் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசுத் திட்டங்களின் தொகுப்பும் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளது.

புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா , மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தாயரித்த உணவுப்பொருட்கள், மூலிகைத் தேநீர் பொடி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பாக புத்தகக்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சலுகை விலையில் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் படைப்பாளிகளுக்கு அரங்கு வழங்கியதற்காக பெரம்பலூர் மாவட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த கவிஞர் கலைவேந்தன் எழுதிய தமிழ்த்துளி புத்தகத்தினை எம்.எல்.ஏ பிரபாகரன் வெளியிட்டார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் உணவுப்பொருட்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், நெகிழி பொருட்களுக்கான மாற்று பொருட்கள் என்னென்ன கிடைக்கின்றது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு அரங்கு, ஆவின் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் அனைவரும் மஞ்சள் பையினை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு மஞ்சள்பை வழங்கும் வடிவிலான புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் அருகில் நின்று பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மஞ்சள் பையினை பெற்றுக்கொள்வது போல ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புகைப்படக் கண்காட்சி அரங்கில், தினந்தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனங்கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி, பள்ளி – கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்ட கவிஞர்கள் பங்குபெறும் கவியரங்கம் என 10 நாட்களும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாரம்பரிய உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், நெகிழிக்கான மாற்று பொருட்களை விளக்கும் வகையிலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்து கண்டுகளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் பெரம்பலூர் எம்.எல்.ஏ வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன், டி.ஆர்.டி.ஏ திட்ட அலுவலர் அ.லலிதா, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.கருணாநிதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, பூமா, ருணா, சௌந்தர்யா, மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் சங்கர் உள்ளிட் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!