In Perambalur with injuries near the unidentified male body!
பெரம்பலூர் அருகே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே சாலையோரம் அடையாளம் தெரியாத ஒருவர் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் இருசக்கர வாகனத்தின் அடியில் சிக்கி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் ஆய்வில் இறந்து கிடந்தவர் சுமார் 35வயது மதிக்க தக்கவராகவும், ஊதா நிற கட்டம் போட்ட லுங்கியும், சாம்பல் நிறத்தில் சிகப்பு கோடு போட்ட சட்டையும், வெள்ளை மற்றும் ஆரஞ்சு கலர் துண்டும், இடது பக்க மார்பில் எம்.பழனியம்மாள், எம்.மணிவண்ணன் என பச்சை குத்தப்பட்டிருந்தது, தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்தவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலை தடுமாறி சாலையோரம் விழுந்து காயமடைந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை பயங்கர ஆயுதத்தால் அடித்து கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.