வரும் சட்ட மன்ற தேர்தலில், பெரம்பலூர் தொகுதி பிஜேபி-க்கு ஒதுக்க வாய்ப்பு; முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ் பேச்சு!

schedule
2025-12-14 | 18:38h
update
2025-12-14 | 18:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the upcoming assembly elections, there is a possibility that the Perambalur constituency will be allotted to the BJP; says former district president Selvaraj.

பாரதிய ஜனதா கட்சியின், பெரம்பலூரில் சட்ட மன்ற தொகுதி சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தொகுதி அமைப்பாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான அசோகன் தலைமையில் நடந்தது. மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச் செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாமி இளங்கோவன், செல்வராஜ், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

கட்சி பூத் கமிட்டி சிறப்பாக செயல்படவேண்டும், வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மத்திய அரசின் சாதனைகள், சிறப்பு திட்டங்கள் குறித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எடுத்துக்கூறவேண்டும். வரும் சட்டசபை தேர்தல் திமுக அரசை வீட்டு அனுப்ப நீங்கள் அனைவரும் அயராது பாடுபட்டு தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறசெய்யவேண்டும் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;

ன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக 45 வயதுயடைய நிதின் நபின் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழகத்துல வேற எந்த கட்சியிலுமே சாத்தியமில்லை. இந்திய தேசத்துல வேற எந்த கட்சியிலும் சாத்தியமில்லை. பாரதிய ஜனதா கட்சியில் உழைத்தால் எவ்வளவு பெரிய உச்ச பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம், அதுதான் பிஜேபி. ஆனா திமுகவுக்கு அடுத்த அடுத்த தலைவர் யார் என அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் அது குடும்ப கட்சி அவர்களது வாரிசு தான் தலைவராக வருவார்கள். இது மக்களாட்சிக்கு விரோதமானது.

காங்கிரஸில் அப்படித்தான். காங்கிரஸில் ஒரு பொம்மையை வச்சிருப்பாங்க. இப்ப கார்கேன்னு ஒரு பொம்மையை வச்சிருக்காங்க. ராகுல் ஏந்திரிச்சா ஏந்திரிப்பாரு, உட்கார்ந்தாலே நின்னுட்டே இருப்பாரு. இப்படிப்பட்ட கட்சிகளுக்கு மத்தியில உண்மையான மக்களாட்சிக்கு அர்த்தம் கொடுக்கிற ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்து கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணம் இன்றைய தேசிய தலைவர் நியமனம்.

தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் எங்களுடைய பி.எல்.ஏ – 2 மாநாடு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆக்டிவ் கட்சியாக பிஜேபி இருந்து கொண்டிருக்கிறது. பிஜேபியினுடைய ஆதரவு, பிஜேபியை நோக்கி வருகிற மக்கள் கூட்டம், இளைஞர்கள் கூட்டம், பெண்கள் கூட்டம் மிகப்பெரிய அளவுல அதிகரித்து வருகிறது. தமிழகத்தினுடைய ஒரு மிக முக்கியமான அரசியல் சக்தியாக பாரதிய ஜனதா கட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சனை அத்தனையிலும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அரியலூர் மாவட்டம், உடையான்குடிக்காடுல கரும்பாயிரம் அய்யனார் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற, மிகவும் பழமையான ஒரு கோவில். அந்த கோவிலைச் சுற்றி ஆயிரக்கணக்கான மரங்களைக் கொண்ட கோவில் காடுகள் இருந்தது. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, தமிழகத்தினுடைய பெருமையாக இருக்கக்கூடிய அந்த கோவில் இன்றைக்கு தமிழக அரசால் அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த காடுகள் எல்லாமே அழிக்கப்பட்டிருக்கு. எவ்வளவு பெரிய கொடுமை? யாரைக் கேட்டு அழிச்சாங்க? யாருடைய நிலம் அது? அது அந்தப் பகுதி மக்களுடைய குலதெய்வக் கோவிலாக இருக்கிறது. அதை அழிக்கிறதுக்கு எவனுக்கு இங்க உரிமை இருக்கு? யாருக்கு உரிமை இருக்கு? யாரைக் கேட்டு அந்தக் கோவில் காடுகளை நீங்க அழித்தீர்கள்?

Advertisement

அந்தக் கோவில் காடுகளை நாங்க வந்து நீதிமன்றம் கட்டுவதற்காக அழிக்கிறோம் என்று இந்த தமிழக அரசும் சொல்லுகிறது.
இந்த கோவில் சொத்துக்கள் மட்டும், இந்துக்களினுடைய சொத்துக்கள் மட்டும், எதேச்சதிகாரமாக யார் வேணா எடுத்துக்கலாம். இப்படி இஸ்லாமியப் பெருமக்களுடைய சொத்துக்களையோ, கிறிஸ்தவப் பெருமக்களுடைய சொத்துக்களையோ எடுத்துக்கொள்ள முடியுமா?

இன்றைக்கு எங்களுடைய உண்டியல் காசை எடுத்து, திருப்பரங்குன்றத்துல 365 நாள்ல கார்த்திகை தீபத்துல ஒரு நாள் விளக்கேத்தக்கூடாது அப்படின்னு நீங்க சொல்றீங்கன்னு சொன்னா, விளக்கேத்தறதுக்குதான் நாங்க உண்டியல்ல காசு போடுறோம். ஆனா, விளக்கேத்த மாட்டேன்னு சொல்லி கோர்ட்டுக்கு போறதுக்கு நீங்க வக்கீலுக்கு கட்டணமாக கொடுக்கறதுக்கு எங்க உண்டியல் காசை எடுத்து பயன்படுத்துறீங்க. திருப்பரங்குன்றத்துல ஒரு நாள் அந்த விளக்கு எறிவது 15 மீட்டருக்கு அப்புறம் இருக்கிற தர்காவுக்கு தொந்தவாக இருக்கும்னு சொல்றீங்கன்னா, நீங்க வந்து மத நல்லிணக்கத்தைக் குலைப்பதற்காக இந்தச் செயலைச் செய்கிறீர்கள் என்பதைதான் தமிழக மக்கள் இன்றைக்கு கொந்தளிப்பாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்துல 52 கிராம சபைகளில் திருப்பரங்குன்றத்துல தீபம் ஏத்தணும்னு சொல்லி இன்றைக்கு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தைச் சுத்தி இருக்கிற மதுரை மண்ணைச் சார்ந்த பெருமக்கள் அத்தனை பேருமே, திருப்பரங்குன்றம் மக்கள் அத்தனை பேருமே அங்க தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று ஒருமனதாக நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுடைய உணர்வுகளுக்கு என்ன மரியாதை? இதைத்தான் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி கேட்கிறது.

சவுக்கு சங்கர் வீட்டு கதவை உடைச்சி கைது செய்த காவல்துறை வீட்டிலிருந்த பீரோவை உடைச்சு 500 ரூபாய் பணக்கட்டு திருடிக்கிட்டுப் போயிருக்காங்க. அண்ணல் அம்பேத்கர் பேச்சுரிமையை நமக்கு அடிப்படை உரிமையாக வடித்து கொடுத்தார். இன்றைக்கு நீதிபதி மேல ஏன் இம்பீச்மென்ட் கொண்டு வந்திருக்காங்க? ஏன்னா, இந்த சென்னை ஐகோர்டில் பல நீதி அரசர்கள், திமுகவை சேர்ந்த பொன்முடி, செந்தில்பாலாஜி உட்பட பல அமைச்சர்களுடைய ஊழல்களை விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது இவங்க இம்பீச்மென்ட் போட்டதற்குக் காரணம், மற்ற நீதி அரசர்கள் இவருடைய அமைச்சர்கள் மீது இருக்கிற ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு மறைமுகமாக விசாரிக்கக் கூடாது என்கிற ஒரு அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.

அதுபோல, இன்றைக்கு பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வீட்ல நடந்திருக்கிற இந்த அராஜகம் என்பது, பேச்சுரிமைக்கு விடுக்கப்பட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய சவால். அரசியலமைப்பு சட்டத்திற்கு விடுக்கப்பட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய சவால். இந்த கருத்துரிமையினுடைய கழுத்தை நெரிக்கிற இந்த மாதிரியான விஷயங்களுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது மக்களுடைய எதிர்பார்ப்பு.

சட்டசபை தேர்தல் வரபோகும் நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை வந்து உயரும் என தமிழக முதல்வர் அறிவித்ததுள்ளார். அதாவது, தூண்டில் போடும்போது மண்புழுவை மாட்டுவாங்கல்ல, அந்த மாதிரிதான் இவங்க இலவசங்களை மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வாக்குறுதி அளிக்காத நிலையில் பாஜ அரசு ஒரே நேரத்தில் , ஒன்றரை கோடி பேருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி இரண்டரை கோடி பேருக்கு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, ஒரு கோடி பேருக்கு கொடுத்துட்டு மிச்சம் உள்ளவங்க எல்லாம் தகுதி இல்லைன்னாங்க. 2024 எம்பி தேர்தல் நேரத்தில் 20 லட்சம் பேருக்கு தகுதி வந்துருச்சுங்கிறாங்க. இப்போ 2026 ம்தேதி சட்டசபை தேர்தல் வரும்பொழுது, இன்னும் 30 லட்சம் பேருக்கு தகுதி வருதுங்கிறாங்க. இதைவிட மோசமான ஒரு அரசியலை பார்க்க முடியுமா? அப்போ, நீங்க ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகத்தான் இந்த மாதிரியான திட்டங்கள் எல்லாம் திமுக அமல் படுத்துறாங்க ஒழிய, மக்களுடைய நன்மைக்காகப் பண்ணலைங்கிறதுதானே கேள்வி? திமுக கொடுக்கும் மகளிர் உரிமை தொகையில்

மத்திய அரசு எஸ்.சி, எஸ்.டி-யினுடைய வளர்ச்சிக்காக கொடுக்கிற நிதியிலிருந்து திமுக அரசு மகளிர் உரிமைத் தொகைக்கு எடுத்துக் கொடுக்கிறாங்க. என்னமோ இவங்க மாநில அரசு நிதியை மட்டுமே கொடுக்கிற மாதிரி பேசிட்டு இருக்காங்க. அந்த ரூ.ஆயிரம் ரூபாயில் மத்திய அரசாங்கத்தினுடைய நிதி இருக்கிறது. மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ 2ஆயிரத்து 800 தருகிறது. இது பத்தி மத்திய அரசு விளம்பரப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான செல்வராஜ் பேசியதாவது: பெரும் சிரமத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக கோட்டையாகவும், ஆ.ராசாவும் உள்ள இந்த மாவட்டத்தில், அதை விட பெரும் சிரமம்பட்டு பாஜக வளர்ந்துள்ளது. அதையும் தாண்டி ஆ.ராசாவின் ஊரிலேயே சில வார்களில் திமுக அதிக வாக்குகளை தேர்தலில் பெற்றுள்ளோம். மேலும், கடந்த எம்.பி தேர்தலின் போது, பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் நல்ல வாக்குகள் பெற்றுள்ளோம். தமிழக அளவில் பெரம்பலூரில் பாஜக அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்றும், இந்த முறை திமுகவை நேருக்கு நேராக சந்திக்கும் வகையில், வரும் சட்ட மன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக-விற்கு ஒதுக்க வாய்ப்புள்ளது, தொண்டர் அயராது உழைக்க வேண்டும் என பேசினார். பின்னர், கவுள்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் கவுள்பாளையம் கலைச்செல்வன் பேசினார்.

பெரம்பலூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்டப் பொதுச் செயலாளர் வரதராஜன், உமாஹைமவதி, மாநில விவசாயி அணி செயலாளர் பூபதி, பெரம்பலூர், அரியலூர், மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளரும், தஞ்சை மேற்கு பொறுப்பாளருமாக தவசி. அன்பழகன், மாவட்ட துணை தலைவர் தேவேந்திரபாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள்,மண்டல தலைவர்கள், பூத் கமிட்டி முகவர்கள், கிளை தலைவர்கள், சக்தி கேந்திரபொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மாநிலச் செயலாளர் கல்வியாளர் பிரிவு செயலாளர் ராம்குமார் வரவேற்றார். பெரம்பலூர் நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 03:02:13
Privacy-Data & cookie usage: