மக்கள் தங்களுக்கு அளித்திருப்பது பதவி அல்ல, பொறுப்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில், பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!

schedule
2020-01-22 | 16:14h
update
2020-01-22 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

It is not the position that the people have given them, but the responsibility of the meeting of the Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சியை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அரசியலமைப்பு ஆணைகள், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பொறுப்புகள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை தொடங்கி வைத்த கலெக்டர் வே.சாந்தா பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இப்பதவிகள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்திட அரசிற்கும், பொதுமக்களுக்கு இடையே பாலமாக திகழ வேண்டும்.

Advertisement

நீங்கள் அனைவரும் அரசாங்கம் மூலமாக பொதுமக்களுக்கு செயல்படுத்தும் அத்துனை திட்டங்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக அரசின் உதவி தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வாய்ப்பாக அமையும். உதாரணமாக முதியோர் உதவித்தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகள் மூலமாக தங்கள் பகுதியை சேர்ந்த தகுதியுடையோருக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தங்கள் ஊராட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும், என பேசினார்.

அதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கிராமசபை, கிராம ஊராட்சி கூட்டங்கள், பயனப்படி மற்றும் அமர்வுப்படி, பணிகள் அனுமதித்தல், பணிகள் செயலாக்கம் மற்றும் செலவினம் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்தும் மின்னனு பரிவர்த்தனை தொடர்பான பொது நிதி மேலாண்மை அமைப்பு, நிதி அனுமதி நடைமுறைகள் மற்றும் தொகை அனுமதித்தல் நடைமுறைகள் குறித்தும் குடிநீர் விநியோகம் தொடர்பான குளோரினேஷன் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல், பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூடுவதற்கான வழிமுறைகள், தெரு விளக்குகள் பழுது பராமரிப்பு, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மின்சார பயன்பாட்டு கட்டணம் மற்றும் குடிநீர் வினியோகப் பயன்பாட்டு கட்டனம் செலுத்துவது, இயற்கை இடர்பாடுகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைளளை மேற்கொள்ளுவது குறித்தும், கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வீட்டுவசதி திட்டங்கள், தூய்மை பாரத இயக்கம், வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாலிங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 13:20:14
Privacy-Data & cookie usage: