MGR. century ceremony: marathon and exhibition was initiated by Minister Manikandan.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு மராத்தான் போட்டியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக 3 நாட்கள் நடைபெறும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார். கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டுவிழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூன் 30ல் மதுரை மாவட்டத்தில் தொடக்க விழா நடந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி பார ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியானது சிறுவர், சிறுமியர் என இருபாலருக்கும் தனிதனியாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பரிசுகளை வழங்குவார்.
மாரத்தான் போட்டியினை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் நிழற்குடையில் செய்தி தொடர்பு துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியானது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராம்கோ தலைவர் முருகேசன், விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன், ராமநாதபுரம் டிஎஸ்பி நடராஜன் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, சேதுபதி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.