பெரம்பலூர் அருகே மாயமான ஆசிரியர்கள்! சிட்பண்டு நிறுவனத்திற்கு கொடுத்த பணத்தை கேட்டதால் கொலையா? ஆசிரியையின் கார் கோவையில் கண்டெடுப்பு! போலீசார் விசாரணை!!

schedule
2023-12-01 | 17:03h
update
2023-12-02 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mysterious teachers near Perambalur! Murder for asking for money given to Chitfund company? Teacher’s car found in Coimbatore! Police investigation!!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). இவர் வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இதேபோல் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா(42) வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில வருடங்களாக நண்பர்களாக பழகி இவர்கள் இருவரும், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனிடையே தீபா உள்ளிட்ட பலரிடம் நம்பிக்கையாக பேசிய வெங்கடேசன் பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கி திருச்சியில் உள்ள தனியார் சிட்பண்டு நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் தீபா, வெங்கடேசனிடம் கொடுத்த 22 லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி, வழக்கம்போல் வேலைக்குச் சென்ற தீபாவும் வெங்கடேசனும் பள்ளி வேலை நேரத்திற்கு பின்னர் மாயமாகினர்.

Advertisement

இவர்கள் இருவரையும் அவர்களது குடும்பத்தார்கள் தேடி வந்த நிலையில், தீபாவை காணவில்லை என வி.களத்தூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் பாலமுருகனும், வெங்கடேசனை காணவில்லை என அவரது மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்திம் புகார் கொடுத்திருந்தனர்.

இருபுகார்களின் பேரிலும் வழக்கு பதிவு செய்த போலீசார், தீபாவையும், வெங்கடேசனையும் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 11:30 மணி அளவில், கோவை பி ஒன் பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் தீபா பயன்படுத்தி வந்த கார் 2 நாட்களாக கேட்பாரற்று நிற்பதாக, தீபாவின் கணவரான பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பெயரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான தனிப் படை போலீசார் நேற்று நள்ளிரவு கோயம்புத்தூருக்கு விரைந்து சென்று, பி ஒன் காவல் நிலைய போலீசார் உதவியுடன் காரை திறந்து பார்த்தனர். காரில் ரத்தக்கரை படிந்த நிலையில் ஒரு சுத்தியலும், உடைகளும், ஒரு கத்தியும், தீபாவின் தாலி, குண்டு, கொலுசு, ஏடிஎம் கார்டு மற்றும் வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்ததை கண்டெடுத்தனர்.

இதனால் தீபா ஒருவேளை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிற போலீசார் வெங்கடேசனின் உறவினர்களான ராஜா பிரபு, ஆனந்த் ஆகியோரையும், கோயம்புத்தூர் மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் 15 நாட்களுக்கு முன்னர் மாயமான நிலையில், அவர்கள் பயன்படுத்திய கார் சந்தேகத்திற்கு இடமான நிலையில், கண்டறியப்பட்டு இருக்கிற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

பணம் கேட்டு கொடுத்த நெருக்கடியால் ஆத்திரமடைந்து தீபாவை வெங்கடேசன் கொலை செய்து, அவரது சடலத்தை பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளோ அல்லது கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதைத்திருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வரும் போலீசார், ஆசிரியர் வெங்கடேசனை தேடி 3 தனிப்படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்து இருக்கின்றனர்.

மாயமான ஆசிரியர் வெங்கடேசன் பிடிபட்டால் தான் இப்பிரச்சனையின் முடிச்சு முழுவதும் அவிழும் என்பதும், தீபாவை கொலை செய்தது யார் என்பதும் தெரிய வரும். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 22:05:14
Privacy-Data & cookie usage: