Namakkal Taluk Lorry Owners Association Executive Election Adjournment: Fans of Members
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சங்கத் தலைவர் வாங்கிலி தலைமையில் தற்போதைய நிர்வாகிகள் 5 பேரும் ஒரே அணியாகவும், முன்னாள் தலைவர் நல்லதம்பி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட முடிவு செய்து சங்க உறுப்பினர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்நிலையில் தேர்தல்குழு தலைவர் பொன்னம்பலம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் நல்லதம்பி, தன்னை சங்கத்தில் இருந்து நீக்கியதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று அந்த உத்தரவை தேர்தல் குழுவுக்கு அனுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து சங்கம் சார்பில் மற்றொரு விளக்க கடிதம் தேர்தல் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த இரண்டு கடிதங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சுமார் 1மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு வரும் 23ம் தேதி நடைபெற இருந்த சங்க நிர்வாகிகள் தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தேர்தல்குழுத்தலைவர் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:
கோர்ட்டில் வழக்குகள் முடிந்த பிறகு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் தேர்தல்குழு உறுப்பினர்களான தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணபதி, துணைத்தலைவர் தங்கவேல், உதவி தலைவர் செந்தில், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பெரியசாமி, காளிமுத்து, முன்னாள் எல்பிஜி சங்க தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.