இந்து தருமத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது : இல.கணேசன் பேச்சு

schedule
2018-10-15 | 16:08h
update
2018-10-15 | 16:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

No one can even shake the Hindu Dharma: L.Ganesan MP at the Hindu Uprising Conference in Namakkal

நாமக்கல் : மாற்று மதத்தினர் 800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டபோதிலும், கூட இன்னும் இந்தியாவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் உள்ளனர். இதனால் இந்து தருமத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நாமக்கல்லில் நேற்று, நடைபெற்ற இந்து தன் எழுச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
அவர் இந்து நாளை என்ற தலைப்பில் பேசியதாவது:

உலக நாடுகளின் வரலாற்றை பார்த்தேமேயானால் மதத்தை பரப்பவே நாட்டை பிடித்தனர் என்பதும், அகற்காகக பல ஆயிரம் பேரை கொன்று குவித்தனர் என்பதும் தெரியவரும். ஆனால் இந்து மதத்தை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு ஆட்சி செய்தவர்கள் பிற நாடுகளுடன் போரிடவில்லை.

இப்போதுள்ள இந்துக்கள் பலர் நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை அறியவில்லை. ஆனால் அதனை வெளி நாட்டினர் தெரிந்துகொண்டு இங்குள்ளவர்களுக்கு சொல்லி வருகின்றனர். உலகப்பொதுமறை எனப் பெற்றப்படும் திருக்குறளை நம்மில் பெரும்பாலானவர்கள் பாடப்புத்தகத்தை தாண்டி கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

Advertisement

இந்து தருமம் ஆண்டவனால் படைக்கப்பட்டது. இதனால் இந்து சமுதாயம் வாழ்ந்தே தீரும். இஸ்லாமியர்களும், ஆங்கிலேயர்களும் 800 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும், இந்தியாவில் இப்போதும் கூட 90 சதவீதம் அளவுக்கு இந்துக்கள் உள்ளனர். இதன் மூலமே இந்து தருமத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வழிபாட்டு தலங்களை அந்த மதத்தின் குருமார்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். ஆனால் இந்து கோயில்களை மட்டும் ஏன் அரசு நிர்வகிக்கிறது. தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும் தான் கோயில்களை அரசு நிர்வகித்து வருகிறது. பிற மாநிலங்களில் அரசு தலையீடு இல்லை.

கோயில் வருமானத்தில் 80 சதவீதத்தை அறநிலையத்துறை நிர்வாக செலவுகளுக்கு தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தான் கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கூறுகிறோம்.

இந்து சமுதாயம் சக்தி படைத்ததாக மாற வேண்டும். அந்த நிலையை ஏற்படுத்த பெரிய நிறுவனங்கள் பொருளதவி செய்ய வேண்டும். இந்து சமுதாயத்தில் பல்வேறு சமுதாயப் பணிகளை செய்யும் அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு இங்குள்ள நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும்.

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற இந்த இரண்டு மதங்களுக்குள் மதமாற்றம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த இரண்டு மதத்தினருமே இந்துக்களை மதமாற்றம செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த நிலை மாற இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.

நாட்டுக்கு நல்லது செய்யும் அனைவரும் நல்லவர்கள் தான். நாட்டுக்கு கெடுதல் செய்யும் அனைவரும் கெட்டவர்கள் தான். இந்தியா வல்லராசாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் நாட்டின் வளர்ச்சியோடு, நாட்டின் தருமமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய நாட்டின் பெருமை மிகு கலையான யோகா இப்போது உலக நாடுகள் எங்கும் பரவியுள்ளது. இதுபோன்ற இந்தியாவின் தருமங்கள் உலகம் எங்கும் பரவ வேண்டும். அது இந்தியாலும் வலுவாக தொடர வேண்டும். அதற்காக இந்து அமைப்புகள் தொடந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.

இந்து நேற்று என்ற தலைப்பில் ரமண பாரதி, இந்து இன்று என்ற தலைப்பில் சேவா இன்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் பேசினர். மேலும் இந்து சமுதாய சிறப்புகள் குறித்து முன்னாள் காவல்துறை தலைவர் வி.பாலச்சந்திரன், நாமக்கல் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆகியோர் பேசினர்.

விழாவில் முன்பதிவு செய்த 6,000 பேருக்கு சாளக்கிராமம், துளசி செடி, பழனி விபூதி, மீனாட்சியம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்து சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 09:03:13
Privacy-Data & cookie usage: