Opposing protest to close and open Tasmac liquor store near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் திட்டக்குடி -அரியலூர் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு, மது அருந்தும் மது பிரியர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மது அருந்திவிட்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்து, போக்குவரத்திற்கு இடையூறாக செயல்படுவதாலும் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருவதோடு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கடையின் அருகே குடியிருப்புகள், திருமண மண்டபம் , சந்தை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று மதுபான கடை அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்துவதற்காக திரண்டிருந்தனர். அவர்களிடத்தில் காவல்துறையினரும், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடையை மாற்று இடத்தில் வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை தற்காலிகமாக பூட்டப்பட்டு இருந்தது.
அப்பொழுது டாஸ்மாக் மதுக்கடைக்கு மது வாங்க வந்த மது பிரியர்கள் சிலர் கடையை உடனடியாக திறக்க வேண்டும், எங்களுக்கு மது வேண்டும் மது குடிக்காவிட்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறியும் தங்களுக்கு உடனடியாக மது வேண்டும் என்று கூறியும் பிரச்சனையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை முன்பு சாலையில் படுத்து மறியல் செய்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தகராறு செய்ய முயன்றதையடுத்து காவல்துறையினர், மது பிரியர்களை விரட்டியடித்தனர்.