Painting competition for students to face exams without fear! Happened at Perambalur Kendriya Vidyalaya School
மத்திய கல்வி அமைச்சகத்தால் பராக்ரம் திவாஸ்’ என்ற பெயரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளான இன்று அவரது, வாழ்க்கையை பார்த்து மாணவர்களை ஊக்கம் கொள்ளவும், அவர்களுக்கு தேசபக்தியை வளர்க்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளையொட்டி மாணவர்களிடையே தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான முயற்சியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி பிரதமர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தேர்வு வாரியர்ஸ்” ஆவது எப்படி என்பதை மையக்கருத்தாக கொண்டு 25 தலைப்புகளில் நாடு முழுவதும் நடந்தது.
இதன்படி பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களது மனதில் கலைத்திறன் மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வண்ணம் ஓவியப்போட்டி நடந்தது.
இந்த போட்டியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வேல்முருகன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி சிறந்த ஓவிய படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் சிறந்த 5 படைப்புகளுக்கு புத்தகம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரதமர் மோடியின் தேர்வு வாரியர்ஸ் என்ற புத்தகம் வழங்கினார்.