Perambalur: A bus overturned in an accident after being hit by a lorry; 21 people, including 9 women, were injured!
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் பல்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பெண்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனர்.
அரியலூரிலிருந்து சென்னைக்கு பல்கர் லாரி ஒன்று சிமெண்ட் பவுடர் லோடு ஏற்றிக் கொண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி மகன் ரவிக்குமார் (43) ஓட்டிச் சென்றார். லாரி பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் ஏறி தடம் மாறி எதிர் திசைக்கு சென்றது. அப்போது, சென்னையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நோக்கி ஆம்னி பஸ் சென்றது. அதனை திருப்பூர் மாவட்டம், முத்தூரை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்திக் (40) என்பவர் ஓட்டி வந்தார். வந்த ஆம்னி தனியார் பஸ் மீது மோதியது. இதில் ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆம்னி பஸ்சில் பயணித்த 9 பெண்கள் மற்றும் லாரி டிரைவர் உள்பட 21 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படையினருடன் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி சின்னத்தா (80), சுப்பிரமணி தாராபுரம் அருகே உள்ள எலத்தான் வலசுவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி காந்திமதி (60), திண்டுக்கல் மாவட்டம், குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன்ரெங்கராஜ் (49) மற்றும் லாரி ஓட்டுனர் ரவிக்குமார் ஆகியோர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி சாலையின் குறுக்கே இடையூறாக நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை கிரேன் மூலம் அகற்றி சீர் செய்தனர்.