Perambalur: A gang of 5 people who stole copper coils from transformers was arrested with a van!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டர்மங்கலம், பெரியம்மாபாளையம், அத்தியூர், சு.ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளிட்ட மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்ம்கள் உடைக்கப்பட்டு அதினுள் இருந்த காப்பர் காயில்கள் ஆயில்கள் திருடு போன வண்ணம் இருந்தன. இது குறித்து மின்வாரியத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசுக்கு சவாலாக இருந்த இச்சம்பவத்தால் பல விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும், மின்வாரியத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆலத்தூர் அருகே உள்ள காரை பிரிவுச் சாலையில் பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து போலீஸார் விசாரணை செய்ததில், அதில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் செல்லமுத்து (48), மும்முடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துரத்தினம் (31), சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் சூர்யபிரகாஷ் (20), ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுஜித்ராஜ் (23), கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் செல்வகுமார் (27) என்பது தெரியவந்தது. இந்த கும்பல்,
இந்த 5 பேர் கொண்ட கும்பல், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான காப்பர் காயில்களை டிரான்ஸ்பார்மகளில் இருந்து திருடி எடுத்து சென்று விற்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ஒரு ஆம்னி கார் மற்றும் 15 கிலோ காப்பர் கம்பிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.