Perambalur: Prisoner escapes from police custody; caught by special forces in Kerala!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஓலைப்பாடியை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வாஞ்சிநாதன் (34). இவர் பதின்ம வயது சிறுமி ஒருவரை கன்னத்தில் கடித்து வைத்ததால், அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் கிளை சிறையில் சிறைக்காவலில் வைத்து இருந்தனர். கடந்த 24 அன்று காவல் நீட்டிப்புக்காக போலீசார் பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் பெரம்பலூர் சப்- ஜெயிலுக்கு பெண் போலீஸ் ஒருவரும், ஆண் போலீஸ் ஒருவரும் அழைத்து சென்றனர். பழைய பேருந்து நிலையம் பகுதியில் வந்த போது சவ ஊர்வலம் வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாஞ்சிநாதன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானான். போலீசார் தப்பி ஓடியவனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து அதிதீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
கோயம்புத்தூருக்கு ஒரு தனிப்படையும், அரியலூருக்கு ஒரு தனிப்படையும், கேரளாவிற்கு ஒரு தனிப்டையும் விரைந்தது. அப்பகுதிகளில், வாஞ்சிநாதன் முன் நாட்களில் வேலைபார்த்துள்ளதால் அப்பகுதிக்கு தான் செல்ல வேண்டும் என திட்டமிட்டு தேடிவந்தனர். தப்பி ஓடிய வாஞ்சிநாதன் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து வேறுஒருவரிடம் போன் தொலைந்து விட்டதாக கூறி அவருடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து வக்கீல் நம்பர் கேட்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே, போலீசார் குடும்பத்தார், உறவினர்கள், மற்றும் அவனது நண்பர்களிடம் தப்பி ஓடியது குறித்து தெரிவித்ததோடு, போன் செய்தால் தெரிவிக்க கூறியதால் உறவினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், விரைந்து செயல்பட்ட போலீசார் பாலக்காடு ரயில்வே போலீசார் உதவியை நாடி அவர்களுக்கு வாஞ்சிநாதனின் போட்டோவை அனுப்பி வேறு ஊருக்கு பிடிக்க செய்தனர். அதற்குள் எர்ணாகுளத்தில் இருந்து விரைந்து பெரம்பலூர் போலீசார் வாஞ்சிநாதனை பாலக்காட்டில் இருந்து பெரம்பலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதலில், துறையூர் சென்ற வாஞ்சிநாதன் தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக கூறி பணம் வசூல் செய்து, கரூர், ஈரோடு, வழியாக பாலக்காடு சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்டுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும், வாஞ்சிநாதன் தப்பிக்க பணியில் அலட்சியமாக இருந்த பெண் போலீஸ் உள்பட 2 போலீசாரை எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.