Perambalur: AMMA Project shelters received 224 petitions, 101 petitions sloved in spot
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (9.09.2016) பெரம்பலூர் வட்டத்தில் கல்பாடி (வடக்கு) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட க.எறையூர், வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை (தெற்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசலூர், குன்னம் வட்டத்தில் வசிஸ்டபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட மேட்டுக்காளிங்கராய நல்லூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூர் (மேற்கு) ஆகிய கிராமங்களில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெற்றது.
அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக (Assured Maximum service to Marginal people in All villages) அம்மா திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள், குடும்பத்தில் இரு பெண்குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும் நடைபெற்ற முகாமில் பெரம்பலூர் வட்டத்தில் 46 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 57 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 17 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 104 மனுக்களும் என மொத்தம் 224மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 101 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடியாகத்தீர்வு காணப்பட்டது. 80 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 43 மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும், அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.