Perambalur: Anti-drug awareness run flagged off by the Collector, MLA, and SP!
ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டாட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை கலெக்டர் ஷரண்யா, எம் எல் ஏ சிவகுமார், போலீஸ் எஸ்.பி லலித்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட தொழில் மையத்தில் தொடங்கிய ஓட்டம் பாலக்கரை, நகராட்சி அலுவலகம் வழியாக மலர் மருத்துவமனையில் திரும்பி மீண்டும் மாவட்ட தொழில் மையத்தில் முடிவடைந்தது. சுமார் 5 கி.மீட்டர் தூரம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், டி சர்ட் வழங்கப்பட்டது.
முன்னதாக போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், உறுதி மொழியும் எடுத்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, விளையாட்டு பயிற்றுநர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.